Monday, May 25, 2009

ஒருமடமாதும் ஒருவனுமாகி - பட்டினத்தார்

நன்றி: http://www.treasurehouseofagathiyar.net/28100/28157.htm

அன்பர்களே,

பட்டினத்தடிகளின் மிகப்பிரபலமான "ஒருமடமாதும் ஒருவனுமாகி"
என்னும் பாடலை இங்கே இணைத்துள்ளேன்.
இக்காலத்தவர் புரிந்து வாசித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக
வரிப்பிளந்து, பிரித்து, நான்கு நான்கு அடிகளாக எழுதியுள்ளேன்.
புணர்ச்சியடைந்த சிலசொற்களையும் பதம் பிரித்துள்ளேன்.
பாடலின் பொருளைக் கூடுமானவரை தானாகவே புரிந்துகொள்ளவேண்டி
இவ்வேற்பாடு. பேசப்பட்ட சொற்களாக வருமிடங்களில் க்வொட்டேஷன்
குறிகளைக் கொடுத்துள்ளேன். இதெல்லாமே பொருளணர்தலின்பொருட்டுச்
செய்தவையே.
மனிதன் கருவாக உற்பத்தியாகி, கடைசியில் நீறாகிமறைவதுவரை
வாழ்வின் கட்டங்களைப் படம்பிடித்து பட்டினத்தடிகள் காட்டியிருக்கிறார்.
இதற்குரிய சந்தத்தினை பட்டினத்தடிகளே தந்துள்ளார். அதன்படி
படித்துக் கொள்ளவும்.
அடுத்தபடியாக இதற்கு எளிய தமிழுரையும், ஆங்கில மொழியாக்கமும்
கொடுக்கவேண்டும்.

குறிப்புச் சந்தம்

தன தன தான தன தன தான
தந்ததனந்தன தந்ததனந்தன
தனனதனந்த தனனதனந்த
தானன தானன தானனதந்த
தந்ததனதான தனதானனா


ஒருமடமாதும் ஒருவனுமாகி
இன்பசுகந்தரும் அன்புபொருந்தி
உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணித மீதுகலந்து-

பனியிலோர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பி கமடமிதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற-

உருவமுமாகி உயிர்வளர்மாதம்
ஒன்பதும் ஒன்று நிறைந்துமடந்தை
உதரமகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமும் நாளும்அறிந்து-

மகளிர்சேனை தரவணையாடை
மண்மடவுந்தியு தைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீரறி வாகிவளர்ந்து-

ஒளிநகையூறல் இதழ்மடவார்உ
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடியிலிருந்து மழலைபொழிந்து
"வாஇருபோ"என நாமம்விளம்ப

உடைமணியாடை அரைவடமாட
உண்பவர்தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழ்தியலைந்து
தேடியபாலரோ(டு) ஓடிநடந்து-
அஞ்சுவயதாகி விளையாடியே, 1


உயர்தருஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து-

மயிர்முடிகோதி அறுபதநீலவண்டிமிர்
தண்டொடை கொண்டைபுனைந்து
மணிபொன்இலங்கு பணிகளணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க-

"மதனசொரூபன் இவன்"எனமோக
மங்கையர்கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து
மாமயில்போலவர் போவதுகண்டு -

மனதுபொறாமல் அவர்பிறகோடி
மங்கலசெங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி இதழமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி -

ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்ததனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த விதனமிதென்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து -

வளமையும்மாறி இளமையும்மாறி
வன்பல்விழிந்திரு கண்களிருண்டு
வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகுரோதமடைந்து -
செங்கையினில்ஓர் தடியுமாகியே. 2

வருவதுபோவ தொருமுதுகூனும்
மந்தியெனும்படி குந்திநடந்து
மதியுமழிந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமல்மொழிந்து --

துயில்வருநேரம் இருமல்பொறாது
தொண்டையும்நெஞ்சும் உலர்ந்துவறண்டு
துகிலிமிழந்து சுணையுமழிந்து
தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு -

"கலியுகமீதில் இவர்மரியதை
கண்டிடும்!"என்பவர் சஞ்சலமிஞ்ச
கலகலவென்று மலசலம்வந்து
கால்வழிமேல்வழி சார நடந்து -

தெளிவும்இராமல் உரைதடுமாறி
சிந்தையும்நெஞ்சமும் உலைந்துமருண்டு
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறி"நல்ஆதர(வு) ஏது?"எனநொந்து -

"மறையவன்வேதன் எழுதியவாறு
வந்ததுகண்டமும்", என்றுதெளிந்து
"இனியெனகண்டம்? இனியெனதொந்தம்?
மேதினிவாழ்வுநி லாதுஇனிநின்ற -

கடன்முறைபேசும்" எனஉரைநாவு
றங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமும்நாலு சுவாசமும்நின்று -
நெஞ்சுதடுமாறி வருநேரமே. 3

வளர்பிறைபோல எயிறும்உரோம
மும்சடையும்சிறு குஞ்சியும்விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல்யம தூதர்கள்வந்து -

வலைகொடுவீசி உயிர்கொடுபோக
மைந்தரும்வந்து குனிந்தழநொந்து
மடியில்விழுந்து மனைவிபுலம்ப
மாழ்கினரேஇவர் காலமறிந்து -

"பழையவர்காணும்" எனும்அயலார்கள்
பஞ்சுபறந்திட நின்றவர்"பந்தர்
இடும்"எனவந்து "பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும்",என்று -

பலரையும்ஏவி முதியவர்தாம்இ
ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில்தொங்கல் களபமணிந்து
பாவகமேசெய்து நாறும்உடம்பை -

"வரிசைகெடாமல் எடும்",எனஓடி
வந்திளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகிநடந்து சுடலையடைந்து
"மானிடவாழ்வென வாழ்(வு)?"எனநொந்து -

விறகிடைமூடி அழல்கொடுபோட
வெந்துவிழுந்து முறிந்துநிணங்கள்
உருகிஎலும்பு கருகிஅடங்கி
ஓர்பிடிநீறும்இ லாதஉடம்பை -
நம்பும்அடியேனை இனிஆளுமே. 4


அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment